செய்திகள்
மாவோயிஸ்டு தீபக்

மாவோயிஸ்டு தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Published On 2019-11-22 11:31 GMT   |   Update On 2019-11-22 11:31 GMT
சிறையில் உள்ள மாவோயிஸ்டு தீபக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடர்ந்து அடைத்து வைக்குமாறு கோவை மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி கேரள தண்டர் போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் மாவோயிஸ்டு மணிவாசகம் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய தீபக் உள்பட 3 பேர் குண்டுகாயங்களுடன் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தமிழக -கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 9-ந் தேதி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டு தீபக்கை (வயது 32) அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை தடாகம் போலீசில் அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.

தடாகம் போலீசார் அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாவோயிஸ்டு தீபக்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு தீபக் மீது சத்தீஷ்கார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்திஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டம் சிண்டல்நர் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் திடீரென்று ஒன்று திரண்டு துணை ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 76 துணை ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இந்த சம்பவத்துக்கு பின்னர் துணை ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஏராளமான மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீபக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், சத்திஸ்கர்  மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலும் தீபக்கிற்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மாவோயிஸ்டு தீபக் மீது சுக்மா மாவட்டத்தில் ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து  சுக்மா மாவட்ட கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.

தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு தீபக் இந்தியாவில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவராக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தீபக்கை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்குமாறு கோவை மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News