தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை
தா.பேட்டை:
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தா.பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தா. பேட்டை அருகே ஊரக் கரை கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தனர்.ஊரக்கரை பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் இணைபபுகளை முறைப்படுத்தி ஆழ் குழாய்கிணறுகள் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் முறையாக வழங்க வேண்டும்.
தினசரி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக்கரை ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் சிவராசு அங்கிருந்த அலுவலர்களிடம் மக்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.