நெல்லை அருகே போலீஸ்காரர் மனைவியிடம் 5 பவுன் செயின் பறிப்பு
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தேவர்குளம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின். இவர் மானூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது26). நேற்று மாலை சுகன்யா தனது கைக்குழந்தையுடன் தேவர்குளம் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுகன்யா அருகே சென்று அவரிடம் இந்த சாலை எந்த ஊருக்கு செல்கிறது என்று விசாரித்துள்ளனர். பின்னர் பேசி கொண்டிருக்கும் போதே சுகன்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
சுகன்யா உடனே கத்தி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் இரண்டு பேரையும் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
இதுகுறித்து சுகன்யா தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து தாலி செயினை பறித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றார்.