செய்திகள்
செந்தில் பாலாஜி

ஸ்டாலின் சிக்னல் தந்தால் 15 எம்.எல்.ஏ.க்களை அவரது வீட்டு வாசலில் நிறுத்த முடியும்- செந்தில் பாலாஜி பரபரப்பு பேச்சு

Published On 2019-11-22 05:36 GMT   |   Update On 2019-11-22 05:36 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காண்பித்தால் அடுத்த நாளே பத்து என்ன 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்த முடியும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர்:

கரூர் நகரில் உள்ள பஸ் நிலையம் இடநெருக்கடியாக உள்ளதால், கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ . கலந்து கொண்டு பேசியதாவது:-

கரூர் திருமாநிலையூரில் பஸ் நிலையம் அமைக்கப்படுகிற போது கரூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு எளிதாக செல்ல முடியும். இந்த புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கிய போது கோர்ட்டை நாடி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைக்க உத்தரவிட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. புதிய பஸ் நிலையம் கொண்டு வர தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை.

கரூர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான பட்டியல், செலவினம் குறித்து கேட்டால் தர மறுக்கிறார்கள். எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சியாக இருக்கிறது. எல்லாவற்றிலும் கொள்ளை அடிக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமே கூறினார்.



இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்னல் காண்பித்தால் அடுத்த நாளே பத்து என்ன 15 எம்.எல்.ஏ.க்களை அவரின் வீட்டு வாசல் முன்பு கொண்டு போய் நிறுத்த முடியும். ஒன்றிரண்டு அமைச்சர்களே வர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதை அவர் விரும்பவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என விரும்புகிறார். நம்மால் என்ன செய்ய முடியுமோ? அதை தான் வாக்காளர்களிடம் சொல்ல வேண்டும் என அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் என்னிடம் தெரிவித்தார். அ.தி.மு.க. போன்று பொய்யான வாக்குறுதிகளை அளிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வரியை குறைத்துள்ளார்கள். முதியோர் உதவித்தொகை ஆணையும் ஏராளமாக வழங்கப்படுகிறது. ஆனால் மாதா மாதம் பணம் வராது. பா.ஜ.க.வின் அடிமை ஆட்சி தான் இங்கு நடக்கிறது. ஆட்சி முடிந்ததும் சேலம், திருச்சி, வேலூர் அல்லது புழல் சிறையில் ஊழல் பேர்வழிகள் மொத்தமாக அடைக்கப்படுவார்கள்.

இன்றைக்கு தமிழகத்தை பாதிக்கும் நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி. அதே போல் 2021 சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்-அமைச்சராவார்.

அதற்கு பிறகு 100 ஆண்டுகள் ஆனாலும் சென்னை கோட்டை பக்கமே நீங்கள் (அ.தி.மு.க.) வர முடியாது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஓராண்டுக்குள் திருமாநிலையூரில் பஸ் நிலையம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

அரவக்குறிச்சியில் நான் வாக்குறுதி அளித்தபடி வீடு இல்லாத ஏழை எளியவர்கள் 1,500-2,000 பேருக்கு நிலம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று நிலம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News