செய்திகள்
கொலை மிரட்டல்

கோவிந்தசாலையில் சிறுவர்களை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-11-21 17:06 GMT   |   Update On 2019-11-21 17:06 GMT
கோவிந்தசாலையில் சிறுவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை கோவிந்த சாலை ராஜீவ்காந்தி குடியிருப்பு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் திலகர். இவர் கொசக்கடை வீதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர் (40). இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரம்யா (13)என்ற மகளும், ஜெய்கமல் (10) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று மாலை ரம்யா அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் தங்கையுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் ரம்யாவை தாக்கினர்.

மேலும் இதனை தடுக்க முயன்ற ரம்யாவின் தம்பி ஜெய்கமலையும் தாக்கினர். அதோடு இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.

இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய மலர் வீட்டில் பிள்ளைகள் காயத்துடன் அழுது கொண்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் விவரத்தை கேட்டு அறிந்து குழந்தைகளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.

இதுகுறித்து மலர் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் இரிசப்பன் வழக்குபதிவு செய்து ஆனந்த் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News