பேராவூரணி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதிகாலை வரை அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் உடைக்க முடியவில்லை. பின்னர் ஆட்கள் நடமாட்டம் இருந்து வந்ததால் மர்ம நபர்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று காலை 6 மணியளவில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்த பொதுமக்கள் எந்திரம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பேராவூரணி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பேராவூரணி சப்- இன்ஸ் பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் உடைக்க முடியாததால் அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.