செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் பிணமாக மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அய்யூர் செல்லும் சாலையில் பூதுகோட்டை பஸ் நிறுத்தத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை. பிணமாக கிடந்த பெண் மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து இருந்தார். இடுப்பில் கயிறும் கட்டி இருந்தார்.
இது குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரி பழனி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.