செய்திகள்
தாயுடன் நிவேதா

உயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்

Published On 2019-11-20 06:07 GMT   |   Update On 2019-11-20 06:07 GMT
உயிருக்கு போராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன் (48). அவரது கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் முளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்காக காத்திருந்தார்.

முருகனின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசு ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்து பலர் காத்திருந்து வரும் நிலையில் அவருக்கு கிடைப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அவரது 19 வயது மகள் நிவேதா தனது ஒரு பகுதி கல்லீரலை தானம் கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை (லேப் ராஸ் கோப்பி) மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தினர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

சென்னையில் முதல் முறையாக இந்த சிகிச்சை ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரூ.22 லட்சம் கட்டணத்தில் 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்தது.

உயிருக்கு போராடிய தந்தைக்கு மகளே கல்லீரலை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது.



அவர் ஜெம் மருத்துவமனை தலைவர் சி.பழனி வேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார்.

அப்போது தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News