ஆரல்வாய்மொழி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- வாலிபர் பலி
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அழகிய நகர் பகுதியை சேர்ந்தவர் சுபானந்தன். இவரது மகன் தமிழ் (வயது 25).
இவர் நேற்று ஆரல்வாய்மொழியில் இருந்து முப்பந்தலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார். ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தமிழ் எதிர் பாராதவிதமாக சாலை யோரம் நின்ற லாரியின் பின் பகுதியில் மோதினார். இதில் தூக்கிவீசப்பட்ட தமிழுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை தமிழ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.