செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2019-11-18 11:41 GMT   |   Update On 2019-11-18 11:41 GMT
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த ஒரு பெண் திடீரென தங்கள் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அருகில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கூறியதாவது:-

திண்டுக்கல் அடுத்துள்ள புளியராஜக்காபட்டியைச் சேர்ந்த எனது பெயர் தனம் (வயது 35). எனது கணவர் சின்ன வைரவன். கூலி வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கென்று சொந்த வீடு இல்லாததால் அரசு புறம்போக்கு பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக வரி செலுத்தி வசித்து வருகிறேன்.

எனது வீட்டு அருகே எனது மாமனாருக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் வீடு கட்டி எனது கணவரின் அண்ணன் வசித்து வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறை கட்டுவதற்கு பணிகள் செய்து வந்தேன்.

அப்போது எனது கணவரின் அண்ணன் மாமுண்டி என்னை கழிப்பறை கட்ட விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை தாக்கினார். மேலும் எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்தேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து குழந்தைகளுடன் அவரை மனு அளித்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கடந்த சில வாரங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் கதையாக நடந்து வருகிறது. போலீசார் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து சோதனை நடத்தினாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை.
Tags:    

Similar News