ஆவடியில் சாலையை சீரமைக்க கோரி பெண்கள் திடீர் போராட்டம்
ஆவடி:
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட சரஸ்வதி நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மழை பெய்யும் போது சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் குட்டையாக தேங்கி நிற்கிறது.
இதையடுத்து சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஆவடி மாநகரட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரஸ்வதி நகர் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில் இன்று காலை உண்ணாவிரதம் இருக்க பெண்கள் உள்பட சுமார் 70 பேர் ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல்அறிந்ததும் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குறையை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அப்போது அவர்களிடம் இன்ஸ்பெக்டர் காளிராஜ், கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விளக்கி கூறினார். மேலும் நன்கொடையாக ரூ.500 அளித்தார்.