மக்களுக்காக சிறை சென்றதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்கிறார்- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம்:
தமிழக அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி மற்றும் நடைபயணத்தை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் திருப்பரங்குன்றத்தில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சிறைக்கு சென்றது மக்களுக்காக என்று பொய் சொல்கிறார். கச்சத்தீவு, காவிரி போன்றவற்றை மீட்டு தருவதற்காக சிறை சென்றாரா?. மக்களுக்காக இதுவரை அவர் சிறை சென்றது கிடையாது என்பது உண்மையிலும் உண்மை.
முல்லை பெரியாறு, காவிரி உட்பட பல விசயங்களில் சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க. தலைவர் தன் வாய் ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். அப்படி என்றால் அவர் தோல்விதான் அடைய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. தான் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.