செய்திகள்
பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, பல மர்மங்கள் அடங்கியுள்ளன- முக ஸ்டாலின் டுவிட்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனில், தனது தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் பத்மநாபன் என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. பல மர்மங்கள் அடங்கியிருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகின்றன. பாத்திமா பெற்றோரின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை அரசு நிரூபிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.