செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அப்துல் லத்தீப் மனு அளித்தார்

மகள் மரணத்தில் உரிய விசாரணை - தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு

Published On 2019-11-15 14:41 GMT   |   Update On 2019-11-15 14:41 GMT
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார்.
சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 9-ந்தேதி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவரது செல்போனில், தனது தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் பத்மநாபன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பேராசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், சென்னையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். தனது மகளின் மரணம் தொடர்பாக சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டி முதல்வரிடம் அவர் மனு அளித்தார்.

அவருடன் இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கடயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. முகமது அபூபக்கரும் வந்திருந்தார்.

Tags:    

Similar News