செய்திகள்
குடோனில் குட்கா மூட்டைகள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கோவையில் குடோனில் பதுக்கிய ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல்

Published On 2019-11-15 14:17 GMT   |   Update On 2019-11-15 14:17 GMT
கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை:

கோவை சரவணம் பட்டி போலீசார் நேற்று இரவு கோவை- சத்தி சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லோடு ஆட்டோ வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். போலீசார் லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டு பிடித்தனர். அதனை பறிமுதல் செய்தனர்.

லோடு ஆட்டோவில் வந்த இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்களது பெயர் தேஸ்சா ராம், (42), மோதிலால் (38) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் தேஸ்சாராம் கோவை செல்வபுரத்திலும், மோதிலால் கருமத்தம் பட்டியிலும் வசித்து வருகிறார்கள்.

அவர்களிடம் போலீசார் மேலும் விசாரித்த போது கோவை கருமத்தம் பட்டி மோப்பிரிபாளையத்தில் குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று குடோனில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ. 75 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். அதனை கடத்த பயன்படுத்திய லோடு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தேஸ்காராம், மோதிலால் ஆகியோர் கருமத்தம் பட்டி குடோனில் இருந்து கோவை மாநகர், புறநகர், திருப்பூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.பிடிபட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News