செய்திகள்
தமிழக அரசின் இலச்சினை

தமிழகத்தின் 5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

Published On 2019-11-15 12:28 GMT   |   Update On 2019-11-15 12:28 GMT
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கலெக்டர்களை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதுபோல நெல்லையை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் வேலூரை 3 ஆக பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம்பெறும் வருவாய் கோட்டங்கள், தாலுகாக்களை எவை? என்பதை  13-ம் தேதி அரசு வெளியிட்டது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்களை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக கிரண் குராலா, தென்காசி மாவட்ட கலெக்டராக அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக ஏ.ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக சிவன் அருள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங், திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக விஜயகுமார், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக  மயில்வாகணன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News