செய்திகள்
தற்கொலை

அரியாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை

Published On 2019-11-15 11:13 GMT   |   Update On 2019-11-15 11:13 GMT
அரியாங்குப்பத்தில் பொதுப் பணித்துறை என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

புதுவை அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 52). இவர் பொதுப்பணித்துறையில் சுகாதாரத்துறை கோட்டத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், வைத்தியநாதன் என்ற மகனும் உள்ளனர்.

வைத்தியநாதன் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சிவசங்கரன் புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மகன் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சிவசங்கரனின் மனைவி சாந்தி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இன்று காலை சாந்தி தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால், பல முறை போன் செய்தும் கணவர் எடுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் உள்ள தனது தம்பி ராஜாராமனுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

இதையடுத்து ராஜாராமன் உடனடியாக சிவசங்கரன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டு வராண்டாவில் அக்காள் கணவர் சிவசங்கரன் மின் விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து ராஜாராமன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து மகன் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் சிவசங்கரன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியாங்குப்பம் பகுதி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News