செய்திகள்
திருமாவளவன்

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி மனு

Published On 2019-11-15 11:00 GMT   |   Update On 2019-11-15 11:00 GMT
இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் பார்த்திபன் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் சமீபத்தில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் திருமாவளவன் பேசினார். அந்த கூட்டத்தில் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ பதிவு வேகமாக பரவி இந்து மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது இந்த செயல் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வத்தலக்குண்டுவில் இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்து கோவில்களின் வடிவமைப்பை இழிவுபடுத்தியும் இந்துக்களின் மனம் புண்படும் படியும் பேசியதை கண்டித்து காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியனிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் மதுரை வீரன், ஆட்டோ முன்னணி நகர தலைவர் முத்துசாமி, ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

மேலும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்து கடவுள்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசிய திருமாவளன் மீது மனு அளிக்கப்பட்டது.

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சூர்யா தலைமையில் நிர்வாகிகள் வினோத்ராஜ், ரமேஷ் ஆகியோர் மனு அளித்தனர்.

Tags:    

Similar News