செய்திகள்
காலாப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
காலாப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை பெரிய காலாப்பட்டு வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 75). இவர் சம்பவத்தன்று காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்புத்துப்பட்டு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ரங்கநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரங்கநாதன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.