செய்திகள்
நீரில் மூழ்கி பலி

சாயல்குடி அருகே கண்மாயில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி

Published On 2019-11-15 04:54 GMT   |   Update On 2019-11-15 04:54 GMT
சாயல்குடி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற 7 வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி பலியானான். நீண்ட முயற்சிக்கு பிறகு அவனது உடல் மீட்கப்பட்டது.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மேலக் கிடாரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. இவரது கணவர் சவுந்தரபாண்டி உடல் நலக்குறைவால் 33 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் உதயகமலேஷ் (வயது 7).

அதே பகுதியில் உள்ள பள்ளியில் உதயகமலேஷ் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்து நண்பர்களுடன் மேலக்கிடாரம் கண்மாய்க்கு சென்றான். அங்கு நண்பர்களுடன் குளிப்பதற்காக கண்மாயில் உதயகமலேஷ் இறங்கினான்.

யாரும் கவனிக்காத நேரத்தில் அவன் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரிகிறது. அங்கிருந்து வெளியே வரமுடியாத உதயகமலேஷ் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினான். இதை கவனிக்காத நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதற்கிடையில் பள்ளிக்கு சென்ற உதயகமலேஷ் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கண்மாய் கரையில் உதய கமலேசின் ஆடைகள் கிடந்தன. இதையடுத்து விசாரித்தபோது உதய கமலேஷ் குளிக்க வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சாயல்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கண்மாயில் இறங்கி தேடினர். இரவு நேரம் என்பதால் சிறுவனை தேடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் வீரர்கள் தொடர்ந்து கண்மாய்க்குள் மூழ்கி இருந்த உதயகமலேஷ் உடலை மீட்டனர்.

கணவர் இறந்த ஒரு மாதத்திற்குள் மகனை பறி கொடுத்த கல்யாணி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கீழச்செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News