செய்திகள்
ஜெயில்

புதுவையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 வாலிபர்களுக்கு 6 மாதம் ஜெயில்

Published On 2019-11-13 12:28 GMT   |   Update On 2019-11-13 12:28 GMT
புதுவையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டை அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது24). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (24), பாலமுருகன் (21), பொருட்செல்வன் (26) ஆகிய 3 பேர் ஞானபிரகாசத்திடம் ஜாதிபெயரை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஞானபிரகாசத்தை கையாலும், தடியாலும் தாக்கினர்.

இதுகுறித்து ஞானபிரகாசம் வன்கொடுமை தடுப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்தது. அதன் தீர்ப்பு நேற்று புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தலைமை நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News