செய்திகள்
மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை- ஒரு கிராம் ரூ.3644
தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் 3644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை:
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தியாவில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. செப்டம்பர் மாதம் உச்சகட்டமாக ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று ஒரு சவரன் 29 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.28,944 என்ற நிலையில் இருந்தது. கிராம் 3618 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, தங்கம் ஒரு சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையானது.
அதன்பின்னர் மேலும் உயர்வு கண்டு, பிற்பகல் நிலவரப்படி ஒரு சவரன் 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் 3644 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 48 ரூபாயாக உள்ளது.