ஓடும் பஸ்சில் குடிபோதையில் கலாட்டா செய்த 2 மாணவர்கள் கைது
சென்னை:
கோயம்பேட்டில் இருந்து நேற்று காலை அண்ணா சதுக்கத்துக்கு மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந் தது.
திருவல்லிக்கேணி வாலாஜாசாலையில், 2 கல்லூரி மாணவர்கள் இந்த பஸ்சில் ஏறினார்கள். அவர்களிடம் பஸ் பாசை காட்டும்படி கண்டக்டர் கோபிநாத் கேட்டார்.
பஸ் பாசை காட்ட மறுத்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். கண்டக்டரின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்தார்கள்.
இதையடுத்து பஸ்சை நிறுத்தச் சொன்ன கண்டக்டர், 2 மாணவர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். திருவல்லிக்கேணி போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது அந்த மாணவர்கள் குடிபோதையில் இருந்தது சோதனையில் தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் பெயர் பிரேம்குமார், ரவி என்றும், கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. குடிபோதையில் கலாட்டா செய்த அந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.