செய்திகள்
கோப்பு படம்

ரூ.21 லட்சம் வாடகை பாக்கி 9 கோவில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

Published On 2019-11-12 11:46 GMT   |   Update On 2019-11-12 11:46 GMT
திண்டுக்கல் அருகே ரூ.21 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 9 கோவில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் வணிகநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பல கடைகள் வாடகையை முறையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காத நபர்களின் கடைகளை பூட்டி சீல்வைக்கும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக 15 கட்டிடங்கள் உள்ளது. இதில் லிங்கராஜ், கருப்பையா, தங்கராஜ், பாப்பம்மாள், தாயம்மாள், ரங்கநாதன், வெங்கடகிருஷ்ணன், சிவராஜ் உள்ளிட்டோர் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.

இவர்களிடம் இருந்து மட்டும் மொத்தம் ரூ.21லட்சத்து 39ஆயிரத்து 778 பாக்கி இருந்தது.

பலமுறை அறிவிப்பு செய்தும் இவர்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அனிதா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் செயல் அலுவலர் சுகன்யா, சரகஆய்வர் உமா ஆகியோர் 9 கடைகளையும் பூட்டி சீல்வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத்துறையின் செயல்அலுவலர்கள் கணபதிமுருகன், நாராயணி, மகேஸ்வரி, நரசிம்மன், ரமேஷ், சுரேஷ், ராமகிருஷ்ணன், ஆய்வர்கள் முத்துச்சாமி, கார்த்திக்கேயன், அய்யம்பெருமாள் மற்றும் வழக்குஆய்வர் முருகையா ஆகியோரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News