அய்யலூர் அரசு பள்ளியில் லேப்டாப் வழங்ககேட்டு மாணவர்கள் திடீர் முற்றுகை
வடமதுரை:
அய்யலூர் அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பயின்ற மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்க வலியுறுத்தி நேற்று பள்ளிக்கு திரண்டு வந்தனர். பள்ளியை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு கூறியதன் அடிப்படையில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு லேப்டாப் அனுப்பியவுடன் முறைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.