செய்திகள்
கொள்ளை

புளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளை

Published On 2019-11-11 11:42 GMT   |   Update On 2019-11-11 11:42 GMT
புளியங்குடியில் பெட்டிக்கடை-கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி:

புளியங்குடி பாம்புக்கோவில் சந்தை சாலையில் உள்ள பிரசித்தி பெற்றது கற்குவேல் அய்யனார் கோவில். இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று பூட்டி விட்டு நிர்வாகிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கோவிலை திறப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் முன்பு அந்த வழியாக செல்பவர்கள் கூட்டமாக நின்று கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. பின்னர் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இதே பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோவில் மற்றும் அதன் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் ஆகிய இரண்டு விநாயகர் கோவிலிலும் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் காமராஜ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல் கடை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடை உள்ளே சென்ற மர்ம நபர்கள் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அங்கு உள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாகவும் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News