மதுரையில் இளம்பெண்-ஆசிரியையிடம் 16 பவுன் நகை பறிப்பு
மதுரை:
மதுரை மேலபொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி பிரியா (வயது28). இவர் நேற்று மாலை கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.
மூலக்கரையை அடுத்துள்ள மேம்பாலம் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பிரியா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட பிரியா உடனே நகையை பிடித்துக் கொண்டார். ஆனால் கொள்ளையர்கள் இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி கொள்ளையர்களின் கையில் சிக்கியது. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். அவர்கள் பறித்து சென்றது 2 பவுன் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை செல்லூர் கீழவைத்தியநாதபுரம் ராமமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ். இவரது மனைவி பிரீத்தா (63). கணவன்-மனைவி இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
நேற்று இரவு பிரீத்தா சிங்கம்பிடாரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பிரீத்தா கழுத்தில் கிடந்த 14 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.