செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
1985-ல் சட்டப் படிப்பை முடித்த ஏ.பி.சாஹி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2006-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018-ல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.