செய்திகள்
மரணம்

க.பரமத்தி அருகே விபத்து- ஆசிரியர் பலி

Published On 2019-11-09 13:29 GMT   |   Update On 2019-11-09 13:29 GMT
க.பரமத்தி அருகே விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:

கரூர் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 43). இவர் க.பரமத்தி ஒன்றியம், சி.கூடலூர் நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகவும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கரூர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். குமரவேல் தினமும் பள்ளிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

அதேபோல நேற்றும் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு குமரவேல் புறப்பட்டார். கரூர்–கோவை தேசியநெடுஞ்சாலையில் க.பரமத்தி அருகே சாலைப்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, குமரவேல் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குமரவேல் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த குமரவேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமரவேல் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News