செய்திகள்
உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் தாக்கி வாலிபர்- மூதாட்டி பலி

Published On 2019-11-09 08:34 GMT   |   Update On 2019-11-09 08:34 GMT
கோவையில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி வாலிபர், மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வடவள்ளி:

கோவை சோமையம் பாளையம் கண்ணன் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 62). இவரது மகன் அருண். இவருக்கு திருமணமாகி கவுண்டம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கண்ணம்மாள் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். இவரது தோட்டத்தில் 4 வீடுகள் உள்ளது. விவசாய கூலி வேலைக்கு வருபவர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இவரது தோட்டத்தில் நவாவூர் பிரிவு குருசாமி நகரை சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை கண்ணம்மாள் பால் கறக்க புறப்பட்டார். அந்த பகுதியில் பெய்த மழையால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மின்சாரம் தாக்கியது.

மின் வயர் அறுந்து கிடந்ததை பார்த்த கண்ணம்மாள் அதனை கையால் இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கண்ணம்மாள் உடல் தீப்பற்றி எரிந்தது. கண்ணம்மாளின் அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த சுரேஷ் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

சத்தம் கேட்டு தோட்டத்தில் குடியிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அங்கு மின்விபத்து நடந்திருப்பதை அறிந்து அவர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் இது குறித்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்றது. 2 பேரையும் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர்கள் அவர்கள் இறந்து விட்டதாக கூறிவிட்டு கிளம்பிச்சென்று விட்டனர். வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News