செய்திகள்
அயோத்தி தீர்ப்பு - தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
சென்னை:
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
தீர்ப்பை முன்னிட்டு விரும்பத்தகாத விளைவுகள் நடக்காதபடி பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.
இந்நிலையில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்று ஆய்வு செய்தார்.
தலைமைச் செயலகத்திற்குள் வெளி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என தலைமைச் செயலக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலத்தின் முக்கிய இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.