செய்திகள்
தற்கொலை

காதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தற்கொலை

Published On 2019-11-08 11:10 GMT   |   Update On 2019-11-08 11:10 GMT
காதலி இறந்த துக்கத்தில் சீர்காழி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகை:

நாகை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் எழிலரசன். இவரது மகன் அரவிந்தன் (வயது 22). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இதற்கிடையே அரவிந்தன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அரவிந்தன் கடந்த சில நாட்களாக புதுவை உப்பளம் நேதாஜி நகரில் உள்ள உறவினர் மணிவண்ணன் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

நேற்று காலை சீர்காழி சென்ற அரவிந்தன் அங்கு காதலியை சந்தித்து பேசி விட்டு புதுவை திரும்பினார். இதனை அறிந்த அந்த பெண்ணை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த அரவிந்தனின் காதலி அவரது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அரவிந்தனுக்கு கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் சோகத்துக்குள்ளானார். காதலி இறந்ததால் மன முடைந்த அரவிந்தனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று மாலை மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் அரவிந்தன் வீட்டின் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அரவிந்தன் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து அரவிந்தனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News