செய்திகள்
தீர்ப்பு

கிருஷ்ணகிரியில் கணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-11-07 13:54 GMT   |   Update On 2019-11-07 13:54 GMT
கிருஷ்ணகிரியில் கணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஜெடகானூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45). குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி கன்னியம்மாள்(41) என்பவர், சீட்டுகட்டிய பணம் ரூ.25 ஆயிரத்தை எடுத்து, தனது மகள் திருமண செலவிற்காக வீட்டில் வைத்திருந்துள்ளார். அந்த பணத்தை சண்முகம் எடுத்து குடித்து அழித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியம்மாள், இது குறித்து தனது அண்ணன் வேடியப்பனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி சண்முகம் வீட்டிற்கு வந்த வேடியப்பன்(52), சண்முகத்திடம் நைசாக பேசி அழைத்து சென்று, அவர் குடிக்க மதுவாங்கி கொடுத்து, அதில் கொக்கு மருந்தை கலந்து குடிக்க வைத்துள்ளார். இதில் சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, வேடியப்பன் மற்றும் கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் சண்முகத்தை கொலை செய்த குற்றத்திற்காக வேடியப்பன் மற்றும் சண்முகத்தின் மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜரானார். 
Tags:    

Similar News