செய்திகள்
கைதான 2 பேரை படத்தில் காணலாம்.

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

Published On 2019-11-06 17:59 GMT   |   Update On 2019-11-06 17:59 GMT
கந்தம்பாளையம் அருகே, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே ராமதேவத்தில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவில் நடு மண்டபத்தில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. தினமும் காலை 6 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று, மாலை 6 மணிக்கு கோவில் மூடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்தபோது உண்டியல் நடுமண்டபத்தில் இருப்பதை விட சுமார் 20 அடி தூரம் வரை நகர்த்தப்பட்டு நுழைவுவாயிலில் முன்பு இருந்ததையும், மேலும் கல்லை தூக்கிப்போட்டு உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கோவில் அலுவலர் கலைவாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று இரும்பு பாலம் என்ற இடத்தில் நல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோழசிராமணியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 29), பச்சபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தியாகு (33) என்பதும், இருவரும் ராமதேவம் கருப்பண்ண சாமி கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மேலும் பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News