புதுமாப்பிள்ளை இறப்பில் தொடரும் மர்மம்?- போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை உழந்தை கீரப்பாளையம் ஐய்யனார் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் முத்துக்குமரன் (வயது 32). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி இருந்த காரை ஓட்டிச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்தது. இதில் காருக்குள் முத்துக்குமார் உடல் கருகி இறந்தார்.
கார் ஏசியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் பெரும்பாலும் காரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது இல்லை என்று ஒரு சாரார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் முத்துக்குமரன் காருக்குள்ளேயே தன்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருப்பாரோ? என்ற சந்தேகம் இருந்தது. இதற்கு ஏற்றார் போல் காருக்குள் 2 பாட்டில்கள் கிடந்தது. இதனால் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் டிரைவரான முத்துக்குமரனுக்கு காரில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிக்கலாம் என்று நன்கு அறிந்திருப்பார். இருப்பினும் தீ விபத்திலிருந்து தப்பிக்காமல் தானாகவே தற்கொலை செய்திருப்பாரோ? என்ற சந்தேகமும் வலுக்கிறது. மேலும், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.