செய்திகள்
கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2019-11-02 04:04 GMT   |   Update On 2019-11-02 04:04 GMT
புதுவை வில்லியனூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜசேகர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜசேகர் மீது வில்லியனூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்த ஆசிரியர் ராஜசேகர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே அவரை அதிரடியாக சஸ்பெண்டு செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.

ஆனால், வழக்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் போலீசார் ராஜசேகரை கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர். ஆசிரியரின் உறவினர்கள், நண்பர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் ராஜசேகர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சென்னையில் பதுங்கி இருந்த ராஜசேகரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News