செய்திகள்
ஏர்வாடி அருகே ஆழ்துளை கிணறை மூட சென்ற பஞ்சாயத்து செயலாளருக்கு மிரட்டல்
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானதை தொடர்ந்து ஏர்வாடி அருகே ஆழ்துளை கிணறை மூட சென்ற பஞ்சாயத்து செயலாளருக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானதை தொடர்ந்து பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து செயலாளர் ராமன் (வயது 51) அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுபோல தளபதிசமுத்திரம் மேலூரில் கலையரங்கம் அருகில் உள்ள பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணற்றை மூட சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த அன்னபாண்டி என்பவர் ஆழ்துளை கிணற்றின் மீது தனது காரை நிறுத்தி அதனை மூட விடாமல் தடுத்துள்ளார். மேலும் பஞ்சாயத்து செயலாளர் ராமனை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி தாக்க முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அன்னபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.