புதுவை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இதே பகுதியை சேர்ந்தவர் சொக்கேஷ். இவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் இருந்து மகேந்திரன், செட்டிசெந்தில் என்பவருக்கு ரூ.500 கடனாக வாங்கி கொடுத்தார். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் செட்டிசெந்தில் காலம் கடத்தி வந்தார்.
நேற்று மதியம் வாழைக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் எதிரே வைத்திக்குப்பத்தை சேர்ந்த கட்ட செந்தில், செல்லா என்ற செல்வம், செட்டி செந்தில் ஆகிய 3 பேரும் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.
அங்கு சென்ற மகேந்திரன் செட்டி செந்திலிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த செட்டி செந்தில் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கட்ட செந்தில் காலி மதுப்பாட்டிலால் மகேந்திரன் தலையில் ஓங்கி அடித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டார்.
இதில், காயம் அடைந்த மகேந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.