செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Published On 2019-10-30 07:37 GMT   |   Update On 2019-10-30 09:10 GMT
அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

அரபிக் கடலில் திருவனந்தபுரம் அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் நாட்களில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.



இதன் காரணமாக  தமிழகத்தில் குமரி, நெல்லை, மதுரை, விருதுநகர்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் நாளை வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பு நிலையை விட 14 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை இயல்பு அளவான 17 சென்டி மீட்டருக்குப் பதில் 19 சென்டி மீட்டர் வரை பெய்துள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் 15 செமீ மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம், வேலூர் மாவட்டம் சோளிங்கர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டம் கீழச்செருவாய், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 14 செமீ மழை பதிவாகி உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News