செய்திகள்
புகார்

ரூ.50 லட்சம் வரதட்சணை: போலீஸ் அதிகாரி மகன் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2019-10-29 10:13 GMT   |   Update On 2019-10-29 10:13 GMT
ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை:

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராக பணியாற்றி வருபவருடன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் சென்னையில் டி.எஸ்.பியாக பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் ஆவார்.

வரதட்சணையாக ரூ.50 லட்சம் பணம், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டையும் எழுதி கேட்டனர்.

வரதட்சணையில் ரூ.10 லட்சத்தை முதலில் கொடுத்தோம். அதில் புதிய கார் வாங்கிய அதிகாரி, அவரது தாயின் பெயரில் பதிவு செய்துள்ளார். நாங்கள் வசிக்கும் வீட்டையும் அவரது பெயரில் உடனடியாக எழுதிக் கொடுக்க சொல்லி வற்புறுத்துகின்றனர்.

இதுபற்றி மறைமலை நகரில் உள்ள அவர்களின் வீட்டுக்கு சென்று கேட்டபோது நாயை ஏவி விட்டு கடிக்கவிட்டனர். இதில் எனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக மறைமலைநகர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமங்கலம் மகளிர் போலீசிலும் புகார் அளித்துள்ளேன். திருமணத்துக்கு மண்டபம் பார்த்து பத்திரிகையும் அச்சடித்து விட்ட நிலையில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News