செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

Published On 2019-10-23 10:09 GMT   |   Update On 2019-10-23 10:09 GMT
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவரது தந்தை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 12-ம் தேதி அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார்.

மோட்டார் சைக்கிளில் சுபஸ்ரீ சென்ற போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சுபஸ்ரீயின் தந்தை ரவி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை   நடந்து வந்தது.

இந்நிலையில், சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரிய அவரது தந்தை ரவியின் மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட், வரும் 22-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
Tags:    

Similar News