செய்திகள்
கமல்ஹாசன்

சட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் கமல் - பிறந்தநாள் விழாவில் ரஜினி பங்கேற்பு?

Published On 2019-10-23 08:33 GMT   |   Update On 2019-10-23 08:33 GMT
அரசியலில் ஆழமாக தடம் பதிக்க விரும்பும் கமல்ஹாசன் பிறந்தநாளில் ரஜினி பங்கேற்பார் என்று பேசப்படுகிறது. இதையடுத்து அவரது அரசியல் காய்நகர்த்தல் வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பாராளுமன்ற தேர்தலில், அவரது கட்சி போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது. வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.

அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். நவம்பர் 7-ந்தேதி கமல் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமல், இந்த முறை பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:-

கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகன் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மேடைகளில் நிறையவே பேசியிருக்கிறார் கமல். தந்தையே தனது கலையுலகுக்கு ரோல் மாடலாக இருந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன் பிறந்த அதே நவம்பர் 7ந்தேதிதான் அவரின் தந்தை ஸ்ரீநிவாசன் தேசிகனின் நினைவு நாளும். எனவே கமல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்.

இந்த பிறந்தநாளை தன் தந்தையை நினைவுகூரும் விதமாக பெரும் விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார். 1959-ல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல். அதனால் திரை உலகில் அவருக்கு இது 60-வது வருடம்.

இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன் நினைவாக அவரது சிலை திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நிறுவப்பட உள்ளது. பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது.



சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-அமைச்சர் பிரனாயி விஜயன், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ரஜினி காந்தும் கலந்துகொள்வதால் இந்த விழாவில் நிச்சயம் அரசியல் பேசப்படும். இதன் மூலம் அகில இந்திய அளவில் மூன்றாவதாக ஒரு அணியை அமைக்கும் முயற்சியை கமல் முன்னெடுக்கிறார் என்று கூறலாம்.

கமல்ஹாசன் கடந்த தேர்தலிலேயே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சியோ கமல் தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. எனவே அந்த முயற்சியை கைவிட்டு தமிழ் சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணியாக்கவும் முயற்சி செய்தார். அது நிறைவேறவில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பலமான கூட்டணி அமைக்க திட்டமிடுகிறார். பிரசாந்த் கிஷோர் தனது ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அரசியல் தலைவர்களை கட்சிக்குள் கொண்டுவர யோசனை கூறினார். ஆனால் ஊழல் கறை படிந்தவர்களை கட்சிக்குள் இணைக்க மாட்டேன் என்பதில் கமல் பிடிவாதமாக இருக்கிறார்.

எனவே அகில இந்திய அளவில் உள்ள கட்சிகளை இணைத்து தனது தலைமையில் தேர்தலை சந்திக்க தயார் ஆகிறார். இந்த பிறந்தநாளில் அதற்கான பிரசாரத்தையும் பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News