செய்திகள்
பணம்

ஆட்டோவில் தவறவிட்ட பையில் ரூ.75 லட்சம் - ஹவாலா பணமா?

Published On 2019-10-23 04:12 GMT   |   Update On 2019-10-23 04:13 GMT
சென்னையில் ஆட்டோவில் தவற விட்ட பையை மீட்க சென்றபோது, அதில் ரூ.75 லட்சம் சிக்கியது தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பூர்:

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சிராஜ் (வயது 33). இவர் வியாபாரம் தொடர்பாக கடந்த 19-ந்தேதி கேரளாவில் இருந்து ரெயில் மூலம், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள, லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். மேலும், தனது நண்பர் அப்துல் மஜித் (30) என்பவருடன், நேற்று முன்தினம் தங்கசாலைக்கு சென்று பொருள்களை வாங்கினார்.

அதன்பின்னர், தங்க சாலையில் இருந்து, சென்டிரலில் தங்கியிருந்த லாட்ஜிக்கு இருவரும் திரும்பி ஆட்டோ ஒன்றில் வந்துள்ளனர். இந்த நிலையில் சிராஜ் யானைக்கவுனி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தங்கசாலையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு ஆட்டோவில் வந்தபோது ரூ.2 லட்சம் பணம் மற்றும் மடிக்கணினியை தவறவிட்டதாக தெரிவித்திருந்தார்.

உடனே யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சுரேஷ் என்பவரின் ஆட்டோ என்பதை தெரிந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சவுகார்பேட்டை, சுப்பிரமணி தெருவை சேர்ந்த சக்ரா (33) என்பவரிடம் அவர்கள் தவறவிட்ட பணத்தை கொடுத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சுரேஷ் கொடுத்த முகவரிக்கு சென்று அவரது நண்பர் சக்ராவை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பையை பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில், யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பையை சோதனை செய்ததில் அதில் ரூ.75 லட்சம் இருந்தது தெரியவந்தது.

ஆட்டோவில் ரூ.2 லட்சம் மடிக்கணினி தவற விட்டதாக சிராஜ் புகார் கொடுத்த நிலையில், பையில் ரூ.75 லட்சம் இருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் மீட்ட பணம் ஹவாலா பணமா? என்ற கோணத்தில், சிராஜிடம் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News