களக்காடு அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர் ஜெ.ஜெ.நகரில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் கடையில் செட்டிமேட்டை சேர்ந்த சின்னத்துரை, அதேபகுதியை சேர்ந்த சுயம்புலிங்கம் ஆகியோர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் நீங்கள் எப்படி இங்கு வந்து பொருட்கள் வாங்கலாம் என கேட்டு தகராறு செய்தார். மேலும் சின்னத்துரையை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த ராஜேந்திரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.