செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

புதுவையிலும் 28-ந்தேதி அரசு விடுமுறை: முதல்-அமைச்சர் நாராயணசாமி

Published On 2019-10-22 06:34 GMT   |   Update On 2019-10-22 06:34 GMT
புதுவை மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வருகிற 28-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்திலிருந்து வெளிமாநிலம் சென்று பணியாற்றுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக புதுவைக்கு வருவர்.


புதுவை மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கும்படி தலைமை செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் வெளியிடுவார். இந்த விடுமுறை நவம்பர் 9-ந்தேதி பணிநாளாக சமன் செய்யப்படும்.

மதசார்பற்ற கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்காக 20 நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்தோம். எங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, படைப்பாளி கட்சி, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் தினந்தோறும் பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் வேட்பாளர் ஜான்குமாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சென்ற இடமெல்லாம் கை சின்னத்திற்கே வாக்களிப்போம் என மக்கள் கூறினர். இதனால் அமோக வாக்கு வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெறுவார்.

இதனால் எதிர்க்கட்சிகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். சாரம், ரெயின்போநகர், பிருந்தாவனம், சாமிபிள்ளை தோட்டம் பகுதிகளில் எதிர்கட்சியினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனர்.

எங்கள் கூட்டணியினர் இவற்றை அமைதியுடன் எதிர்கொண்டனர். இதனால் எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. தேர்தல் துறையும், காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News