செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட்டில் கமாண்டோ படை பாதுகாப்பு ஒத்திகை

Published On 2019-10-22 05:43 GMT   |   Update On 2019-10-22 05:43 GMT
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப். மற்றும் தமிழக கமாண்டோ படையினருடன் இணைந்து என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய கமாண்டோ படையினரும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செப்டம்பர் 30-ந்தேதி பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் டெல்லியில் இருந்து ஹர்தர்‌ஷன்சிங் நாக்பால் என்பவரின் பெயரில் வந்தது.

ஏற்கனவே சி.ஐ.எஸ்.எப். போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாநில போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐகோர்ட்டு வளாகம் என பல்வேறு இடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

வழக்கறிஞர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களின் அடையாள அட்டையை காண்பித்த பிறகே ஐகோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் செப்டம்பர் 30 அன்று எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

மிரட்டல் கடிதம் எதிரொலியாக நேற்றிரவு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப். மற்றும் தமிழக கமாண்டோ படையினருடன் இணைந்து என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய கமாண்டோ படையினரும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் நவீன ரக வாகனங்களுடன் குவிக்கப்பட்டனர்.

பயங்கரவாதி போல வேடமணிந்த நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்வது போலவும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அவற்றால் ஏற்படும் விளைவுகளை எவ்விதம் கையாளுவது என்பது குறித்தும் போலீசார் செய்து பார்த்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News