மதுரையில் குடும்பத்தோடு தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 40), பெயிண்டர். இவர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னை 5 பேர் மிரட்டுவதாகவும், இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் குடும்பத்தோடு தற்கொலை செய்யப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, வீடியோ குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பகுதியில் வழிப்பறி, ஈவ்டீசிங் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக சதீஷ், கார்த்திக் உள்பட 5 பேர் ஈடுபட்டதாகவும், அவர்களை பற்றி சுந்தர் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் தற்போது சுந்தருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.