செய்திகள்
கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

திருவோணம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் மறியல்

Published On 2019-10-20 16:18 GMT   |   Update On 2019-10-20 16:18 GMT
திருவோணம் அருகே இன்று காலை காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த வெட்டுவாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பட்டு விடுதி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் சீரான முறையில் வழங்கப்பட வில்லை. மேலும் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் குடிநீர் பற்றா குறையை சமாளிக்க லாரிகளில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன் படுத்தி வந்தனர். மேலும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்யக் கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரி களுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காலிகுடங்களுடன் பட்டு விடுதி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை- கந்தவர்வக்கோட்டை சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது `இன்னும் 2 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News