செய்திகள்
விக்கிரவாண்டி பகுதியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

நாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் குவிப்பு

Published On 2019-10-20 13:36 GMT   |   Update On 2019-10-20 13:43 GMT
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,237 போலீசாரும் துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நெல்லை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை (21-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.- திமு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் களுக்கு ஆதரவாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், அன்புமணி, பிரேமலதா, ஜி.கே.வாசன், சரத்குமார், நடிகர் கார்த்திக் ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதர வாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ,  திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன்,   தா.பாண்டி யன், நல்லகண்ணு, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட் பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்தார்.

நாங்குநேரி மற்றும் விக்கிர வாண்டியில் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என வெளிநபர்கள் ஏராள மானவர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். 

தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்குநேரி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,27,389 பேர், பெண் வாக்காளர்கள் 1,29,748 பேர், மூன்றாம் பாலினத்தினர் 3, சர்வீஸ் பணி வாக்காளர்கள் 278 பேர் என மொத்தம் 2,57,418 பேர் வாக்களிக்க உள்ளனர். 

அவர்கள் வாக்களிப்பதற்காக 170 மையங்களில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 71 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 151 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 299 வாக்குச்சாவடிகளிலும் இணையதள கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் 23பேர் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடியிலும் 2 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இதற்காக 688 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு கருவிகள், 440 வி.வி.பாட் கருவிகள் தயார் நிலையில் உள்ளன.மேலும் 89 வாக்குப்பதிவு எந்திரங்கள், 54 கட்டுப்பாட்டு கருவிகள், 96 வி.வி.பாட் கருவிகள் கூடுதலாக கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

நாங்குநேரி இடைத் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கருவிகள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 30 மண்டல அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அவற்றை கொண்டு செல்கின்றனர். மேலும் அந்த குழுவினர் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நாங்குநேரி இடைத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 2 ஏ.டி.எஸ்.பி., 17 டி.எஸ்.பி. உள்பட 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாங்குநேரி தொகுதி முழுவதும் 28 செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 146 மையங்களும், மாநகரத்தில் 5 மையங்கள் என மொத்தம் 151 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 பேர், பெண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேரும், சர்வீஸ் பணி வாக்காளர்கள் 209 பேரும் உள்ளனர்.

இந்த தேர்தலில் 658 மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள், 544 கட்டுபாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 528 வி.வி.பாட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இடை தேர்தலையொட்டி விக்கிரவாண்டி தொகுதில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 6 வாக்குசாவடிகள் மிக பதட்டமான வாக்கு சாவடிகள் ஆகும். மின்னணு எந்திரங்கள் அனைத்தும் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் இன்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தேர்தல் பணியில் 1,330 பேர் வாக்குச்சாவடி அளவிலும், இதர பணியாளர்கள் 600 பேர் என 1930 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,237 போலீசாரும் மற்றும் துணை ராணுவ படையினர், அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். பதிவான ஓட்டுகள்  வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்படும்.
Tags:    

Similar News