செய்திகள்
கோப்பு படம்

இரணியல் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் பணம், செல்போன் பறிப்பு

Published On 2019-10-17 12:11 GMT   |   Update On 2019-10-17 12:11 GMT
இரணியல் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் பணம், செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:

இரணியலை அடுத்த ஆலங்கோடு பரம்பை பகுதியை சேர்ந்தவர் சஜின். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாஷினி (வயது 29).

இவர் நேற்று நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். பின்னர் அவர் பாங்கியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பரம்பை அருகே வரும் போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். திடீர் என்று அந்த வாலிபர் சுபாஷினியின் மோட்டார் சைக்கிள் அருகே சென்று அவர் கழுத்தில் போட்டிருந்த கைப்பையை பறிக்க முயன்றார். இதில் நிலை தடுமாறி சுபாஷினி கீழே விழுந்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர் அவரது கைப்பையை பறித்தார். சுபாஷினி தனது கைப்பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் கொள்ளையன் சுபாஷினியின் கையை தட்டிவிட்டு கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சுபாஷினி கைப்பையில் ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன், வங்கி பாஸ்புக் ஆகியவை இருந்தது.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேதமாணிக்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News